தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Friday, September 24, 2010










வணக்கம் சொந்தங்களே
வரலாறு நெடியது. முடிவில்லாதது. வாழ்க்கையைப் போலவே தன்னை மறந்தவர்களையும், மறைத்தவர்களையும் கடந்து அது நீளப்பயணம் செய்து கொண்டுதான் இருக்கும். இத் தளத்தில் தரப்பெற்றுள்ள தகவல்கள் முற்று முடிந்த முடிபுகள் அல்ல. என்றும் ஆராய இடம் கொடுப்பன. காலப்போக்கில் இதில் சொல்லப் பெற்ற யூகங்கள், செய்திகள் பொய்யாகும்படியான உண்மைகளை ஆய்வாளர்கள் கண்டு சொல்லக்கூடும், சொல்லவும் வேண்டும். வரலாறு முடிந்து விடுவதில்லை, தொடரும் ஒரு தொடரே.

ஆலயங்கள் ஆண்டவனின் இருப்பிடம் மட்டுமல்ல, மானுட ஆன்மாவை மேன்மைபடுத்தும் பயிற்சிக்களங்கள். ஆலயங்கள் வழிபாட்டு மையங்கள் மட்டுமல்ல, வரலாற்று நிலையங்களும்கூட. எமது திருக்கோயில்களில் கண்டு படிக்கப்பட்ட, படிக்கப்படாத கல்வெட்டுகளில் தான் எம் குல வரலாறு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை நம் இனத்திற்கு தெரியவில்லை, புரியவில்லை.

வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக நடக்கமுயன்றுள்ளேன். நான் நடந்த வழித்தடத்தில் என்னால் முடிந்தளவு தேடியுள்ளேன், தேடிக்கொண்டிருக்கிறேன், தேடிக்கொண்டே இருப்பேன். சில பதிவுகள் தப்பாகவும் ஆதாரமற்றவையாகவும் சிலருக்கு தெரியலாம். திருத்திக்கொள்ள ஆதாரங்களுடன் உதவுங்கள். சொந்தங்களே கள்ளர் வரலாறு பற்றிய ஆர்வம் உங்களுக்கும் இருக்குமானால் களத்துக்கு வாருங்கள். உங்கள் கண்களால் தேடப்படும் வரலாறும், கைகளால் எழுதப்படும் வரலாறும் தான் தலைமுறைகளை அடையாலப்படுத்தும். தங்கள் தேடல்களின் முடிவுகளையும் தாங்கள் அறிந்தவை, கேட்டவை, தெரிந்தவைகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கள்ளர் குல வரலாற்று வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவிடும்.
பாசமுடன்
ஜெயராம் இராசகண்டியர்.

பிரகதீஸ்வரம் - அதுவேவிஸ்வரூபம். பெரியகோவில் 1000 ஆண்டுகள்
இலக்கிய படைப்பாளி பாலகுமாரன்

கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. 

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். 

இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.
வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.  உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. 

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. 

"நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். 
இக் கட்டுரையின் படைப்பாளி திரு பாலகுமாரன் அவர்கள்

நன்றி: தினமலர் (சர்வதேச பதிப்பு)

 இக் கட்டுரையின் படைப்பாளி திரு இளங்கோவன் அவர்கள்
கங்கைகொண்டசோழபுரம் கோயில்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்டினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு நிற்கின்றது.அக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் பல வரலாற்றுத் தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன.முறையே தொகுத்துப் பாதுகாத்தால் வரும் தலைமுறைக்கு வரலாற்றைப் பாதுகாத்துத் தந்தோம் என்ற பெருமை நமக்குக் கிடைக்கும்.

முதலில் தஞ்சாவூர் சோழர்களுக்குத் தலைநகராக இருந்தது.சோழநாட்டின் எல்லை இராசராசசோழன் காலத்தில் விரிவடைந்த காரணத்தால் படைக்குத் தலைமை ஏற்றுப் பல போர்களைச் செய்த இராசேந்திரசோழன் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு (கி.பி.1012-1044) கொள்ளிடக்கரையின் வடக்கே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பைச் சீர்செய்து கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கினான்.கங்கைப் படையெடுப்பில் வெற்றி பெற்றதன் அறிகுறியாக இந்த நகர் உருவானதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.

தலைநகரில் கங்கைகொண்டசோழீச்சுரம் கோயிலும்,கோயிலின் மேற்கே மாளிகையும் அதன் மேற்கே சோழகங்கம் என்ற பொன்னேரியும் உருவாக்கினான். கங்கைகொண்டசோழபுரம் சார்ந்த பல ஊர்களுக்குத் தன் வெற்றியின் அறிகுறியாகத் தம் வெற்றிப்பெயர் விளங்கும்படி ஊர்களை உருவாக்கியுள்ளான்.

இன்றைய மலேசியாவில் உள்ள "கெடா" என்ற ஊர் முன்பு கடாரம் என அழைக்கப்பட்டது. இந்தக் கெடா வெற்றியை நினைவூட்டும் வகையில் கடாரம் கொண்டான் என்ற ஊர் உருவாக்கினான்.இன்றும் கங்கைகொண்டசோழபுரத்திற்கு தென்மேற்கே 5 கல் தொலைவில் இந்த ஊர் இன்றும் உள்ளது. சோழப்படைகளுக்கு வேண்டிய ஆயுதங்கள் உருவான இடம் ஆயுதக்களம் என்று அழைக்கப்பட்டது.இன்றும் இந்தப்பெயர் ஊருக்கு வழங்கப்படுகிறது. கட்டடங்கள்,மாளிகைகள் கட்ட சுண்ணாம்பு உருவாக்கிய இடம் சுண்ணாம்புக்குழி என்று அழைக்கப்படுகிறது.

கோட்டை இருந்த இடம் உள்கோட்டை எனப்படுகிறது.யுத்தப்பள்ளம் என்ற ஊர் சண்டை நடைபெற்றதை நினைவூட்டி இன்றும் வழங்கப்படுகிறது.இதன் அருகே திறந்தவாயில் இருந்துள்ளது(தொறந்தவாசல் என மக்கள் இன்று அழைப்பர்).வானதிரையன் குப்பம் என்ற ஊரும் அதனை ஒட்டி வீரசோழபுரம் என்ற ஊரும் சோழர்களின் வரலாற்றைச் சொல்லிக்கொண்டுள்ளன. வானவன்நல்லூர், சோழன்மாதேவி, தென்கச்சிப் பெருமாள்நத்தம்(தென்கச்சி சுவாமிநாதன் பிறந்த ஊர்),வாணதிரையன்பட்டினம்,நாயகனைப்பிரியாள், செயங்கொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு வரலாறு சொல்வன.

சோழபுரம், சோழதரம், வானவன்மாதேவி, கங்கவடங்கன்நல்லூர்,படைநிலை, உள்ளிட்ட ஊர்களும் வரலாற்று முதன்மை உடையன.உலகளந்த சோழன்வெளி என்ற ஊர் ஒன்றும் கோயிலுக்கு அருகில் உள்ளது.உலந்தவெளி எனப் பேச்சுவழக்கில் உள்ளது.

மெய்க்காவல்புத்தூர் ஊரும் குறிப்பிடத்தக்க ஊராகும்.குருகாவலப்பர்கோயிலில் புகழ்பெற்ற வீரநாராயணப் பெருமாள்கோயில் உள்ளது.அரிய சிலைகள்,சிற்பங்கள் உள்ள ஊர். கணக்கவிநாயகர்கோயில் விநாயகர்சிலை உலகப் புகழ்பெற்றது.

சலுப்பை,சத்திரம்,செங்கல்மேடு,பாப்பாக்குடி,மீன்சுருட்டி உள்ளிட்ட ஊர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடங்களாகும். கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து வடநாட்டுக்குச் செல்ல இருந்த பெருவழியில் சத்திரம் அமைத்துப் பலரும் தங்கிச் செல்ல வசதிகள் இருந்துள்ளன. பாண்டிய படையெடுப்புக்குப் பிறகு இந்தப் பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாப் பகுதியாகி விட்டது. நாயாக்கர்,சமீன்தார்கள் ஆட்சியில் இந்தப் பகுதியில் மக்கள் குடியேறி காடுவெட்டி,மண்திருத்தி நிலபுலங்களை வளப்படுத்தியுள்ளனர்.வராலற்று வீரம் செறிந்த மண் இன்றும் வீரம் செறிந்த பகுதியாக விளங்குகிறது.

விக்கிரமசோழன்மங்கலம் என்ற ஊர் அடையாளம் இழந்து விக்கிரமங்கலம் எனப்படுகிறது. இங்குச் சமண,பௌத்த கோயில்கள் இருந்துள்ளன.இதன் அடையாளமாக இந்த ஊரில் கோயில் சிலைகள் உள்ளன. சிலைகளைப் பற்றிய வரலாற்று உணர்வு இல்லாத மக்கள் இச்சிலைகளில் காதுப் பகுதியில் உள்ள துளைகளில் ஆடுமாடுகளைக் கட்டி வைத்திருந்ததை யான் கண்டுள்ளேன்.இப்பொழுது பாதுகாக்கப்படுகிறது.

கங்கைகொண்டசோழபுரத்தின் நான்கு புறத்திலும் நான்கு காளிக்கோயில்கள் இருந்துள்ளன. இவற்றை எல்லைக் காளிகளாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.அவ்வகையில் செங்கல்மேடு(கிழக்கு),இடைக்கட்டு(மேற்கு),வீராரெட்டித்தெரு(தெற்கு),அழகர் கோயில் (வடக்கு) பகுதியில் உள்ள காளியின் சிலைகள் சிறப்புடையன.கலிங்கநாட்டுச்சிற்பங்கள் என்று ஆய்வாளர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.பல ஆண்டுகள் வரை சரியாகப் பராமரிக்கப் படாமல் இச்சிலைகள் வயல்வெளிகளில் மழையிலும், வெயிலிலும் நின்றன. வெளிநாட்டுக் காரர்களுக்குப் பல சிலைகளை முன்னோர்கள் குறைந்த விலைக்கு விற்றதாகவும் மக்கள் வாய்மொழியாகச் சொல்கின்றனர்.

பல வயல்களில் அழகிய கலைவடிவப் பிள்ளையார் சிலைகள் இன்றும் உள்ளன. ஏரி, குளங்களில் துணி துவைக்கப் பயன்படும் கல்களில் அரிய கல்வெட்டுகள் இருப்பதும் உண்டு.மாளிகைமேட்டுப் பகுதிகளில் உள்ள நிலங்களில் களைவெட்டும் பெண்கள் பொற்காசுகள் கிடைகும் என்பதற்காக இந்தப்பகுதிக்குக் களை வெட்ட வருவது உண்டு.முன்பு செங்கல் வீடு கட்டுபவர்கள் மாளிகைமேட்டு அருகே கிணறு தோண்டுவார்கள்.கிணறும் கிடைத்துவிடும்.வீடு கட்டுவதற்கு உரிய கல்லும் கிடைத்துவிடும்.

கங்கைகொண்ட சோழபுரத்து மதில் சுவர்கள் இடிபாடுகள்தான் இன்றைய அணைக்கரையில் உள்ள அணைகட்ட உதவிய கற்களாகும்.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள கிள்ளை,பிச்சாவரம் பகுதிகள் சோழர்காலத்தில் துறைமுக நகராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனச் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.ஒரிசா வரை தமிழர்கள் கடல்வழியாகப் பரவிப்போர் செய்துள்ளமைக்குப் பல சான்றுகள் உள்ளன என்கிறார்.கிழக்குக் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ் அடையாளங்களுடன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்கின்றார்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் வராலற்றுச் சிறப்பு உணர்ந்த முன்னாள் முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் இராசேந்திரச்சோழனுக்கு அவன் பிறந்த மார்கழி மாதம் திருவாதிரை விண்மீனில் விழா எடுத்தும் அகழாய்வுப்பணிகளை விரைவுப்படுத்தியும் வெளியுலகிற்கு இந்த அரிய இடத்தை வெளிப்படுத்தினார். அவர்காலத்தில் ஊக்கம் பெற்ற அகழாய்வுப் பணிகள் இன்று பராமரிப்பின்றி எருமை மாடுகள் வெயில் நேரத்திற்கு விழுந்து புரளும் நீர்க்குழிகளாக உள்ளன.

சிலைகள் சரியாகப் பராமரிக்காமல் மழை,வெயிலில் நனைந்து நிற்கின்றன.பிற்காலத்தில் உருவான அழகர்கோயில் பகுதியில் உள்ள யானைச்சிற்பம் கண்கவர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.பழங்காலச் சிற்பம் என்பதால் இப்பொழுது இடிபாடுகளுடன் சிதைந்து காணப்படுகிறது.பழைமை மாறாமல் அதனைப் பாதுகாப்பது அரசுக்கும் மக்களுக்கும் உரிய கடமையாகும்.


நன்றி
முனைவர் மு.இளங்கோவன்
உதவிப் பேராசிரியர்
தமிழ் பீடம்
பாரதிதாசன் பெண்கள் அரசுக்கல்லூரி
புதுச்சேரி


Thursday, September 9, 2010

வரலாற்றில் புதிய திருப்பம் ?

செப்பேடுகள் – கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்)

20-5-2010 அன்று தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது.
கழுக்காணி முட்டத்தில்- பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட – கைலாசநாதர் கோயில் உள்ளது. தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது-பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள் போன்றவைகள் கிடைத்துள்ளன.


பொதுவாக செப்பேட்டு முத்திரைகளில் உள்ள சின்னங்கள் புடைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தச் செப்பேட்டில் சின்னங்கள் பள்ளமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் புலி, இரண்டு கயல்கள் (மீன்கள்), நாணுடன் கூடிய வில், இவைகளுக்கு இருபுறமும் குத்து விளக்குகள், இவைகளுக்கு மேல் நடுவில் வெண்கொற்றக் குடையும், அதன் இருபுறமும் சாமரமும் பொறிக்கப்பட்டுள்ளன.
இம்முத்திரை 11 செ.மீ. விட்டமும், 2 செ.மீ. கனமும் கொண்டதாகும். தற்போது இவ்வளையத்தில் 86 செப்பேடுகள் கோக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு காணப்பட்டாலும், இவற்றில் உள்ளது எண்பத்தைந்து செப்பேடுகளே. இந்த செப்பேடுகள் கோக்கப்பட்ட வளையத்தில் முத்திரையிடப்பட்டு, பிரிக்கப்படாத நிலையிலே உள்ளன.
இச்செப்பேடுகள் ஒவ்வொன்றும் 44 செ.மீ.நீளம், 21 செ.மீ. அகலம் கொண்டதாகும். இச்செப்பேட்டு முத்திரையின் விளிம்புப் பகுதியில் “தர்ம ஏதத் இராஜேந்திர தேவஸ்ய பரகேசரி வர்மணக ஸ்ரீமச்சாசனம் ஊர்வி ச சிரோபிஹ சேகரி என்று கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. இதன் பொருளானது “இந்தத் தர்மம் இராசேந்திர தேவன் என்கிற பரகேசரி வர்மனால் உலகத்தின் உச்சியின் மீது (தலை சிகரத்தின்) வைக்கப்படுகிறது.
இந்தச் செப்பேடு கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்) தனது முப்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.1053) அளித்த அறக்கொடையைக் குறித்து வெளியிடப்பட்டது. இவர் கங்கைகொண்ட சோழன் எனவும் கடாரங்கொண்டான் எனவும் வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற அரசனாகக் குறிக்கப் பெறும் முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன் ஆவார். ஆம், ராஜராஜ சோழனின் பேரனே முதலாம் இராஜாதிராஜனாவார்.
முதலாம் இராஜாதிராஜனோடு உடன் பிறந்த மற்ற சகோதரர்கள், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், மற்றும் அதிராஜேந்திரன் ஆகிய மூவராவர். முதலாம் இராஜாதிராஜன் இந்த ஆணையினை முடிகொண்ட சோழபுரத்தில் அதாவது பழையாறையில் இராஜேந்திர சோழன் என்ற பெயர் கொண்ட அரண்மனையில் கீழைப் பகுதியில் அமைந்திருந்த விஜயராஜேந்திரக் காலிங்கராயன் என்ற அரச இருக்கையில் அமர்ந்து வழங்கியுள்ளான்.
இவ்வாணை இராஜாதிராஜ வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டு நாட்டாருக்கும்(நாட்டுச்சபை உறுப்பினர்கள்), பிரம்மதேயக் கிழவர்களுக்கும் (காணி உரிமையுடைய பிராமணர்கள்) தேவதான, பள்ளிச்சந்தம், கணி முற்றூட்டு, வெட்டபேறு, அறச்சாலாபோகம் ஆகிய பிற அறக் கொடைகளுக்குரிய நிர்வாகத்தினரான ஊர்களிலார்க்கும் (ஊரவை உறுப்பினர்கள்), நகரங்களிலார்க்கும் (வணிகசபை உறுப்பினர்கள்) அனுப்பப்பட்டுள்ளது.
முதலாம் இராஜாதிராஜனின் தந்தையான முதல் ராஜேந்திரச் சோழன் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய மக்கள் நால்வரையும் அருகிலே அழைத்து நால்வரும் ஒற்றுமையோடு எப்போதும் இருக்க வேண்டுமென்றும்-நாட்டு மக்களுக்கு எப்போதும் நன்மை செய்வதையே அவர்கள் குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென்றும் கூறி, அவர்களிடம் அதற்கான உறுதியைப் பெற்றுக் கொண்டான் என்றும்-அவர்களும் அவ்வாறே தங்கள் தந்தைக்கு உறுதியளித்ததாகவும் இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது.
 பிற்காலச் சோழர்களில் முதல் அரசனாக அறியப்பெறும் விஜயாலயச் சோழன் தஞ்சையை பல்லவ மன்னனான கம்ப வர்மன் என்பவனிடமிருந்து கைப்பற்றி-பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் இச்செப்பேட்டில் காணப்படுகிறது. இதுகாறும் தஞ்சையை சோழர்கள் முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றியதாகவே அறியப்பட்டு வந்தது.மேற்சொன்ன இந்தச் செய்தி, ஒரு புதிய செய்தியாகும்.
இராஜாதிராஜ வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டினைச் சேர்ந்த தத்தமங்கலம், கூத்தனூர், பஞ்சவன்நல்லூர், கரம்பைக்குடி, மேல்நாகக் குடி, கீழ்நாகக்குடி, கொற்றநல்லூர், பெரியங்குடி ஆகிய எட்டு ஊர்களையும், திருவிந்தளூருடன் இணைத்து, அந்தந்த ஊர்களில் இவ்வாணைக்கு முன்னர் காணி உரிமையுடையோராய் இருந்த குடிகளை நீக்கியும், அதன் மீதுள்ள காராண்மை, மீயாட்சி ஆகிய உரிமைகளை நீக்கியும், வெள்ளான் வகை நிலங்கள் அனைத்தையும் மாற்றி, முப்பத்து மூன்றாவது பசானம் (ஆண்டு விளைச்சல்) முதல் சதுர்வேதிமங்கலமாக்கி அறிவித்து இவ்வாணை வழங்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளான புரவுவரிக் கண்காணி சோலை திருச்சிற்றம்பலமுடையான், ஜெயங்கொண்ட சோழ கோசலராயன், நாடுவகை செய்கின்ற சோழவளநாட்டு விளாநாட்டு கரிகால சோழ நல்லூருடையான் கேகயன் ஆதித்தனான கண்டராதித்த மூவேந்த வேளான், புரவுவரித்திணைக்களத்துக் கீழ்முகவெட்டி உள்ளிட்ட பலரும் உடனிருந்து
ஊர்களனைத்தையும் அளந்து, ஒன்றாக்கிச் சதுர்வேதிமங் கலமாக அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாணையினை அளித்த மன்னன் முதலாம் இராஜாதிராஜனின் இறுதி ஆட்சி ஆண்டு முப்பத்தாறு (கி.பி. 1054) ஆகும். 36 ஆண்டுகள் ஆட்சி செய்து, மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லன் சோமேஸ்வரனை எதிர்த்துக் கொப்பத்தில் செய்த போரில் போர்க் களத்திலேயே யானையின் மீதமர்ந்தவாறே உயிரை ஈந்தவன் இம்மன்னன்.
ஏற்கனவே அண்ணன் இராஜாதிராஜனால் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றிருந்த இரண்டாம் இராஜேந்திரன் அந்தப் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடி சூட்டிக் கொண்டு, தலைமையின்றி சிதறிய சோழப் படையை ஒழுங்குபடுத்தி தலைமையேற்று, ஆகவமல்லனின் தம்பி ஜெயசிம்மனைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கொல்லாபுரத்தில் தன் வெற்றித் தூணையும் நிறுவியவன்.
கொப்பத்துப் போருக்குச் செல்லும் முன்னர் அதற்கு முன்னாண்டில் (கி.பி. 1053) அண்ணனால் அளிக்கப்பட்ட இவ்வாணை அவனது தனயன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1061) வரியிலிட்டுச் செப்பேடாக்கித் தரப்பட்டுள்ளது. இரண்டாம் ராஜேந்திரச் சோழன் சோழ நாடு திரும்பிய பின்னர் தன் அண்ணன் முதல் ராஜாதிராஜன் போருக்குச் செல்வதற்கு முன்பாக வழங்கிய தானத்தை உறுதி செய்து வழங்கிய செப்பேடு இப்போது கிடைக்கப் பெற்ற செப்பேடாகும்.
மேற்குறித்த எட்டு ஊர்களிலுமுள்ள நிலங்கள் அனைத்தும் அளக்கப்பட்டு நீக்க வேண்டிய வற்றை நீக்கி, வெள்ளான்வகை, நிலங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, கொடுக்கப்பட்ட நிலங்களுக்கான அளவுகளை மிக விரிவாகக் கூறுகிறது செப்பேடு. பின்னர் சதுர்வேதி மங்கலத்தில் கொடுக்கப்படும் பங்குகளும், அளிக்கப்பட்டோரின் பெயர்களும், அவரவர் ஊர், குடும்பப் பெயர்களோடு வரிசையாகக் கூறப்பட்டுள்ளன.
தொடர்ந்து அவர்கட்குப் பணி செய்யும் நாவிதர், ஈரங் கொல்லிகள் (வண்ணார்), மற்றும் பறை அறிவிப்போர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பங்குகள் குறிக்கப்படுகின்றன. இறுதியாக அறத்தைக் காப்போர் பெறும் பலன் கூறி முடிவுக்கு வருகிறது செப்பேட்டு வாசகம். எண்பத்தைந்து செப்பேடுகளைக் கொண்ட இச்செப்பேட்டில் முதல் எட்டு செப்பேடுகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பகுதியாகும்.
எட்டாம் செப்பேட்டின் இறுதியிலிருந்து கோனேரின்மை கொண்டான் என்று தொடங்கும் தமிழ்ப் பகுதி, 85-ம் செப்பேடு வரை நீள்கிறது. இதில் தான் மேற்கூறிய அனைத்து விவரங்களும் உள்ளன. இச்செப்பேடுகளை எழுதி வரியில் இடப்பட்டது.
இரண்டாம் ராஜேந்திரன் காலத்திலாகும். எனவே, செப்பேட்டின் வளையத்திலுள்ள முத்திரையில் “பரகேஸரி வர்மன் ராஜேந்திரதேவனுடையது என்று கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் “இவ்வளையத்தில் கோத்த செப்பேடு எண்பத்தாறு என்றும் வளையத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தமிழகச் செப்பேடுகள் எதிலும் இவ்வாறு செப்பேடுகளின் எண்ணிக்கை குறிப்பிடவில்லை என்பது சிறப்பாகும். இராஜாதிராஜனால் வெளியிடப்பட்டுக் கிடைத்திருக்கும் முதல் செப்பேடு என்ற பெருமைக்குரியது இச்செப்பேடாகும். தமிழகத்தில்-ஏன் இந்தியாவிலேயே கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரிய செப்பேட்டுத் தொகுதியாகக் கருதப்பட்ட முதலாம் இராஜேந்திரனின் 57 கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகளை விட அளவிலும், செப்பேடுகளின் எண்ணிக்கையிலும் பெரிதாக விளங்குவது இச்செப்பேடாகும்.
இச்செப்பேட்டின் வடமொழிப் பகுதி இதுவரையில் கிடைத்த செப்பேடுகளில் இதுதான் எண்ணிக்கையிலும், அளவிலும் பெரிது ஆகும்.

கள்ளர் குலம்
நாம் செழுமை மிக்க பாரம்பரிய பண்பாடுகளை கொண்ட வலிமை மிக்க உயிர்துடிப்புள்ள ஒரு குலத்தின் சொந்தக்காரர்கள். நம் குலத்திற்கு புதிய வலிமை தேடவோ, புதிய இலக்கணம் படைக்கவோ, செறிவைக் கூட்டவோ முயலவில்லை. எம் முயற்சி எல்லாம் எம் குலத்தின் தொன்மையை ஆராய்ந்து அதன் வயதையும் கணித்து எம் முன்னோர்களுடைய செழுமை மிகு எண்ணங்களை எடுத்துறைக்க வேண்டுமென்பதே. கள்ளர் குலம் பற்றி நடக்கும் ஆய்வுகளையும் முடிவுகளையும் நம் குல வளர்ச்சிக்கு மட்டுமே பயன் படுத்தி உயர்வோம்.
இன்றைய நிலையில் கள்ளர் குலம் தனது இயல்பான மாண்புகளை மறந்து துயில் கொள்கிறது, மதி மயங்கி கிடக்கிறது. தயங்கி நிற்கிறது. நம்மால் முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. சோழன் வட நாட்டின் மீது படையெடுத்த போது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. நாவாய்களை செலுத்தி அலை கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளை வென்றபோது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. கள்ளர் இனமே தயங்காதே, மயங்காதே. அனைத்தும் முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்து.

தமிழகத்தின் தொல் முதுகுடியைச் சேர்ந்தவர்கள் கள்ளர்கள் ஆவார். இவர்களைப் பற்றி பல அறிஞர்கள் பலவாறான கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்று குறிப்பார்.
வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.

சர்.வால்டர் எலியட் கள்ளர்களை  ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார். 

கள்ளர்கள் நாகர் இனத்தவர்
என்று அறிஞர் வி. னகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.

கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.

"கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடியினர் "

என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.

மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.

இவ்வாறாக பலபடி போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்கான இக்குடியினரைப் பற்றி நாம் சிறிது அறிந்து கொள்வது நலமாகும்.
உலக மக்கள் தொகையில் சுமார் இரு கோடி கள்ளர்கள் தற்போது உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து தென்தமிழகம் வரை அதாவது தென் ஆற்காடு ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி, ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பரவலாகவும் மற்ற இடங்களில் மிகமிக குறைந்தும் வாழ்கின்றனர்.

இக்குடியினருக்கு வழங்கும் பட்டப் பெயர்களை நோக்கும் போது உலக இனங்களில் எந்த இனத்திற்கும் இல்லாத அளவில ஆயிரக்கணக்கான பட்டப்பெயர்களை அவர்கள் தாங்கி இருக்கின்றனர், இவர்களது வாழ்க்கை எவ்வளவு உயர்வாகவும், எத்துனை மிகு சிறப்பு உடையவர்களாகவும் வாழ்ந்து, வரலாறு படைத்திருக்கின்றார்கள், என்று நோக்கும் போது யாரும் வியக்காதிருக்க முடியாது. இவர்களது வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தால் தமிழகத்தின் வரலாற்றில் மறைந்து இருக்கும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.

கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை


எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். கோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.
கள்வர் - பகைவர், பிறர்பொருளை கவர்வோர் என்று பொருள் கூறப்படுகிறது. பகைவர்கள் என்றால் அவர்கள் யாருக்குப் பகைவர்கள் என்று நோக்கும் போது  தமிழ்ப் பகைவர்கள் அனைவர்க்கும் பகைவர்களாவர். பிறர் பொருளை கவருதல் என்றால் எந்த இன மக்கள் மற்றவர் பொருளை கவராமல் இருப்பவர் என்று நோக்கும் போது கள்வர் என்பதற்கு உண்மையான வேறு பொருள் இருத்தல் வேண்டும் அதனையும் ஈண்டு காண்போம்.

சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

“ கள்ளராற் புலியை வேறுகாணிய” என்ற

தொடருக்கு அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற் புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது. 
 

இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் நாட்டுத்தலைவர்களாகவும், வேளிர்களாகவும், முடிவேந்தர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், பிற்றை நாட்களில் சமீன்தார்களாகவும், பெருநில உடைமையாளராகவும் வாழ்ந்து வந்துள்ளனர். கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி இனமாக இருந்த காரணத்தால் இன்றும் அவர்கள் வாழும் பகுதிகள் நாடுகாளாக பகுக்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பை கள்ளர் இனத்தவர்களே வகித்து வருகின்றனர் தஞ்சை, மதுரை பகுதிகளில் இன்றும் பல நாடுகளும் நாட்டுக் கூட்டங்களும் நடைபெறுவதைக் காணலாம்.

குறிப்பாகப் பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் பரவலாகவும், கள்ளர் இன மக்கள் சிறுபான்மையாகவும் உள்ள இடங்கிலும் அப்பகுதியி;ன் தலைமையை இவ்வினத்தார் ஏற்று செயல் பட்டு வருவதில் இருந்து அன்னாரது சிறப்பு உணரப் படுவதாகும். பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் இவர்களை உரிமையுடன் “எங்கள் கள்ளர் எங்கள் கள்ளர்” என்று அழைப்பதை நோக்கும் போது இவர்கள் அச்சமுதாய மக்களுக்கு உறுதுணையாய் இருந்து காத்து வருவது புலப்படும் எனவே இங்கு கள்ளர் என்ற சொல் தலைவர் என்ற பொருளில் வழங்கப்படுவது நோக்கத் தக்கதாகும்.

எனவே கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
தமிழகத்தை ஆண்ட பல தரப்பு மன்னர்களும், முடிவேந்தர்களும் இவர்களுடன் தொடர்புடையவர்கள். தமிழர்கள் பலவகையிலும் மற்ற எல்லா நாட்டினரையும் விட பல கலைகளில் தேர்ந்து விளங்கினர். அவ்வகையில் அம்மரபு மாறாமல் சென்ற நூற்றாண்டு வரை ஈங்காங்கே கிராமப் புறங்கிளல் தெருக்கூத்துகள் நடைபெறும் .
அதில் கண்ணகி கூத்தும் ஒன்று அதில் இடம் பெறும் பாண்டிய மன்னன் வேடம் அணிந்தவன் மேடையில் தோன்றும் போது
“தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரை பாண்டியனடா” 
என்று பாடி வருவான் இவ்வரிகளை ஆழ்ந்து நோக்கினால் இதில் இரு பொருள்கள் தோன்றுவதை உணரலாம் ஒன்று தெற்கத்திக்கள்ளன் தான் பாண்டியன் மரபினர் என்பது, மற்றது தென் மதுரை!
தென்மதுரை பஃறுளி யாற்றின் கரையில் அமைந்து இருந்த தலைச்சங்க தென்மதுரையாகும். ஆக அவர்களது தொன்மையரியப்படும் இதற்க ஆதரவாக மற்றொன்றையும் காணலாம்.

அகநானூற்றில் மதுரை கணக்காயனார் ஒரு பாண்டியனை
“கள்வர் பெருமகன் - தென்னர்” 
 என்று குறிப்பிடுவதைக் காணும்போது
பாண்டியர்களும் கள்ளர்கள்என்று அறியமுடிகிறது.
பிற்காலப் பாண்டியர்களில் குலசேகர பாண்டியன் மற்றும் வீரபாண்டியன், ஆகியோர் தங்களது அரசிருக்கைகளுக்கு கள்ளர்களின் பட்டப்பெயரான காலிங்கராயன், மழவராயன், முனையதரையன் என்று பெயர்களைச் சூட்டி கள்ளர்கள் அவர்களுக்குச் செய்த உதவிக்கு பாராட்டு தெரிவிக்கும் முகமாகவும் தங்கள் பாண்டிய ஆட்சியில் அமர அருந்துணை நின்ற அத்தலைவர்களின் பட்;டப்பெயர்களை சூட்டி நன்றி பாராட்டினார். எனவே பாண்டியர்கள் கள்ளர்கள் என்று உறுதிபடக்கூறலாம்.

இதற்குச் சான்றாக ஒன்றினை கூறினால் நலமாய் இருக்கும்
சீனித்தேவர் தன் கள்ளர் வரலாறில் முக்குலம் என்று ஒன்று இல்லை எல்லோரும் கள்ளர்களே
என்று கூறியுள்ளார். அவர் கூறிய வரிகள் தற்போது திரிந்து வழங்குகின்றது. அது பின்வருமாறு

 “கள்ளர், மறவர் கணத்த அகம்படியர்
மெல்ல மெல்ல வெள்ளாளரானார்” என்று கூறப்படுகிறது. 
இதன் உண்மை வரிகள்
கள்ளர், மறவார் கனத்த அகமுடையோர் 
மெல்ல மெல்ல வள்ளளானார் என்பதாகும், 

இக்கூற்றுப்படி கள்ளர்கள் மறத்தண்மையில் எல்லோரையும் விஞ்சி நிற்பவர் உயிர்க்கு அஞ்சா நெஞ்சினர் எனவே அவர்களே மறவரும் ஆவார்.
பாண்டியர்கள் கள்ளர் குலத்தாருடன் எவ்வகையில் தொடர்பு கொண்டு இருந்தனர் என்பதனைப்பார்த்தோம். சுங்க காலங்களில் கள்வர் என்ற சொல் பயின்று வந்துள்ளது கள்வர் குலத்தார் மன்னராய் இருந்தனர் என்பதும் வெளியாகின்றது.

 வேங்கடமலைப்பகுதியை ஆண்ட “புல்லி” என்ற மன்னர் வீரத்திலும் வள்ளன்னையிலும் மிக மேம்பட்டு வாழ்ந்தான் எனத் தெரிகிறது. அவனை மாமூலனாரும் பாடி இருப்பதில் இருந்து அவனது பெருமை புலப்படா நிற்கும்.

அகநானூறில்

“கழல் புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழப்புலம் வணக்கிய மாவன் புல்லி
விழவுடை விழுசீர் வேங்கடம்

புடையிலங் கழற்காற் புல்லி குன்றத்து”
“புல்லி நன்னாட் டும்பர்”
“பொய்யா நல்லிசை மாவன் புல்லி”
“நெடுமொழி புல்லி”

எனமாமூலனாரும்

புல்லி வயன்தலை நன்னாட்டு வேங்கடம்
மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்

எனக் கல்லாடனாரும் பாடியுள்ளனர் நற்றினையில் “கடுமான் புல்லிய காடிறந்தோரே” என மாமூலனர் குறிக்கிறார் பிறிதோர் இடத்தில் அம்பர் கிழான் அருவந்தையை வாழ்த்துமிடத்து

“காவிரி களையுந் தாழ்நீர்ம்படப்பை
நேல்விளை கழனி யம்பர் கிழவோன்
நல்லருந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத் துறையிலும் பலவே

என கல்லாடனார் புறநானூற்றில் குறிக்கிறார் இதனை நோக்கும் போது அவருக்கு புல்லியிடம் எத்தகைய ஈடுபாடு இருந்துள்ளது என உணரமுடிகிறது. இத்தகைய சிறப்பு மிக்க புல்லி கள்ளர் இனத்தவனாவான்.
அகநானூற்றில்

வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்

என்ற வரிகளில் இருந்து வேங்கட மலைப்பகுதி தொண்டையருக்குறியது என்பது புலப்பபடா நிற்கும். எனவே கள்வர் தொண்டையர் என்பன ஒருவகுப்பாருக்கு வழங்கும் பெயராகும். தற்போது தொண்டைமான் என்ற பெயர் கள்ளர்களுக்கே வழங்குவதும் புதுக்கோட்டைம ன்னர்கள் தொண்டைமான்களாக இருப்பதாலும், அவர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் கள்வர் தொண்டையர் கள்ளர் குடியைச்சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுகிறது.

வேங்கட மலையில் இருந்த ஆதனுங்கன் என்ற வள்ளலும் இவ்வகுப்பினன் ஆவான் அவனை கள்ளில் ஆத்திரையனார் என்ற புலவர் புறநானூற்றில்

“எந்தை வாழி யாதனுங்க
ஏன்னெஞ்சந் திறப்போர் நிற்காண்குவரே
நின்னியான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயில் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்னியான் மறப்பின் மறக்குவென்” என

எல்லோர் உள்ளமும் நெகிழும் வகையில் பாடி சிறப்பித்தார். இவ்வாறாக சிறப்புற்ற ஒரு சிலரைப் பற்றி பாடிய பாடலல்கள் நமக்கு வந்து கிட்டியுள்ளன. இவர்கள் போன்ற இன்னும் பலர் நமக்கு எட்டாத நிலையில் இருந்து இருக்க முடியும் அவர்களைப் பற்றிய செய்திகள் வருங்கால ஆய்வாளர்களுக்குக் கிடைக்கலாம்.

பழந்தமிழகத்தில் தமிழர்களுடன் ஒப்பப் பேசப்படும் மற்றோர் இனம் நாகர் இனமாகும். தென்னாட்டின் கீழ்ப்பகுதியில் ஆண்டனர் அவர்;களைப்பற்றி குறிப்பிடும்போது நாம் ஒன்றினை நினைவு கூர்தல் வேண்டும். தமிழகப் பழங்குடிகளான வில்லவர், மீனவர் என்போர் இந்திய முழுமையும் பரவி வாழ்ந்தனர் அவர்களை மக்கள் பெருக்கமும் நாகரீகமும் மிக்க நாகர்கள் வென்று நாட்டை கைகொண்டனர் என்று வரலாற்றாளர் கருதுகின்றனர். ஆவ்வகையில். ஆவர்கள் இந்திய, இலங்கை பர்மா (மியான்மர்) நாடுகளை ஆண்ட இனமாகும்.

கி.மு 13 ஆம் நூற்றாண்டு அளவில் கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட பகுதியில் நாக அரசுகள் இருந்ததாக மகாபாரதத்தில் இருந்து கேள்விப்படுகிறோம். ஆதன் பின் சி.மு. 6 ஆம் நூற்றாண்டில் நாகர்களை நாம் மீண்டும் காண்கிறோம் மகதத்தை ஆண்ட நாககுடி மன்னன் அசாத சத்துரு காலத்தின்தான் கௌதமபுத்தர் தனது புதிய கோட்பாட்டை போதித்தார் அதற்கு நாகர்கள் பேராதரவு தந்தார்கள்.  
இலங்கை வரலாறு அனைத்தும் நாகர்கள் பற்றிய செய்திகளுடன் தொடங்குகிறது. இவற்றில் இருந்து கி.மு. 6ம் நூற்றாண்டில் நாகர்களின் வலிமை மிக்க அரசுகள் தீவின் மேற்குக்கரையில் நிலவின என்றும் அக்காரணம் பற்றியே இலங்கை "நாகதீவம்"
என்றும் அதன் தலைநகர் கல்யாணி எனவும் அழைக்கப்பட்டது. ஆந்த நாக அரசன் தன்மகளை கணத்த மானோ மலையை ஆண்ட நாக அரசனுக்கு மணம் முடித்ததாகத் தெரிகிறது.

அதுவே கல்யாணிக்கு எதிரே இருந்த ராமேஸ்வரத்தையடுத்த கந்த மாதன குன்று எனத் தெரிகிறது. இலங்கையின் முதல் குடிகள் நாகர் மற்றும் இயக்கர்கள் என்று தலைவர் நெடுமாறன் குறிப்பார். அவர் மேலும் நாகர்கள் மொழி தமிழ், இயக்கர்கள் பேசியது தமிழின் திரிபான எலு என்றும் பிறகுவந்த சிங்கக்குடியினர் குடியேற்றத்தால் எலுமொழி “சிங்கஎலு” சிங்களம் என்று திரிந்ததாக கூறுவார் (சிங்கம் +எலு+அம்) சிங்களம்.

1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்கள் நினைவெல்லைக்குள்ளாக நாகர் அரசுகளைவிட பழமை வாய்ந்த அரசுகள் இருந்ததில்லை என்று தோன்றுகிறது இதனையே இளங்கோவடிகள் தமது காப்பியத்தில்
“நாகநீள் நகரோடு நாகநாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர்” என்றார்.
புகார் நகரமே ஒரு காலகட்டத்தில் நாகர்களின் நகரமாக இருந்ததாக கூறுவர். புகாரை நாகர்களிடம் இருந்து முசுகுந்தசோழன் கைப்பற்றினான் என்று கூறப்படுகிறது. நாகர்களை வென்ற முதல் மன்னன் முசுகுந்னேயாவான். புகார் நகரம் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுள் மூழ்சியதாக இங்கிலாந்தைச்சேர்ந்த தலை சிறந்த ஆழ்கடல் ஆய்வாளர் கிரகம் ஆண்காக்கு தெரிவிக்கிறார் இதனை இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற தர்காம் பல்கலைக்கழகத்தில நிலவியல் துறைப்பேராசிரியர் சிளன் மில்லோ உறுதி செய்தார். இந்நாகரீக நகரம்தான் உலகின் முதல் நாகரீக நகரம் இதன் சிறப்பு மொகஞ்சாதரோ, ஹரப்பா நாகரீகங்களைவிட பழமையும், சிறப்பும் மிக்கது என்று கூறியுள்ளனர். இவர்கள் ஆய்வும் முசுகுந்தன் நாகர்களை வென்றதும் குறித்து தமிழர்கள் கருத்து ஒத்துவருவதை காணலாம். எனவே புகார் நகரம் தலைச்சங்கம் அழிந்த காலத்தில் மூழ்கி இருக்கலாம் என்று தெரிய வருகிறது. அதன் எஞ்சிய பகுதியே கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை இருந்து மறைந்தாக கருதலாம்.

“நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர் எங்கும் வேறு இனமொழிக்கு உரியரென்ற பேச்சும் ஏற்படவில்லை தமிழினமாகவே வாழ்ந்தனர். எனவே அவர்கள் கடல் கொண்ட தமிழகத்திலோ தமிழகம் சூழ்ந்த நிலத்திலோ இருந்த தமிழினப்பிரிவினர்கள் என்றும் கடல்கோளின்  பயனாகவோ வேறு காரணங்களாலோ எங்கும் பரந்தவர் என்று கருத இடமுண்டு இது இன்றும் ஆய்விற்குறியது”




தஞ்சை இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழக சார்பாக மா மன்னன் இராசராச சோழன் சிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அங்கத்தினர் மாலை அணிவிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதனை செயல் வடிவம் கொடுத்த முதல் இளைஞர் திரு நடராஜன் காங்கேயர் சரவணனன். 24/05/2010 அன்று காலை 7.30 மணியளவில் இராசராச சோழனுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திரு நடராஜன் காங்கேயர் சரவணனன் மா மன்னன் இராசராச சோழனுக்கு மாலை சூட்டும் காட்சி.


























திரு நடராஜன் காங்கேயர் சரவணனுடன் திரு பாலசந்திரன் கருப்பூண்டார்



















மாலை சூட்டிய பின் திரு சந்திரமோகன் விஞ்சிராயர், சசிகுமார் விசாக தேவர், சரவணன் காங்கேயர், ஜெயராம் ராசகண்டியன் கிருபாகரன், நவீன்குமார் நாட்டார், தியாகராசன் வன்னியர் மற்றும் சம்பந்தமூர்த்தி மழவராயர்  ஆகியோர்.
















வரவேற்புரையாற்றும் ஒரத்தநாடு செயளார் திரு சூரியமூர்த்தி காளிங்கராயர்.


















ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரனுக்கு திரு ரெங்கராஜ் தொண்டமான் சால்வையணிவித்து உரையாற்றுகிறார்

















ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன் சிறபுரையாற்றுகிறார்




ஒரத்தநாடு பொருளாளர் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரனுக்கு சால்வையணிவித்து மகிழுகிறார்


















வள்ளியப்பாள் சுப்பையன் தென்கொண்டார் அறக்கட்டளை. சித்திரக்குடி.தஞ்சை மாவட்டம்.
கடந்த மூன்று வருடங்களாக இத் தொண்டு நிறுவனம் ஏழ்மை நிலையில் இருக்கும் 425 மாணவ மாணவியற்கு ஒவ்வொரு வருடமும் நோட்டு புத்தகங்கள் வழங்கி வருகிறது. இவ் வருடம் இவ் விழா 22/5/2010 அன்று மாலை 5 மணியளவில் திரு கிள்ளிவளவன் தென்கொண்டார் மற்றும்
திருமாவளவன் தென்கொண்டார்
பழனிராஜன் தென்கொண்டார்
பாலகிருஸ்னன் தென்கொண்டார்
காமராஜ் தென்கொண்டார்
கலைக்கோவன் தென்கொண்டார்
சேரலாதன் தென்கொண்டார்
மகேந்திரன் தென்கொண்டார்
ஆண்டவர் வாண்டையார்
செல்வம் சுண்டையார்
செல்லத்துரை சுண்டையார்
ஜெயபால் மங்களார்
ராஜேந்திரன் சோழகர்
முதலாணோர் பங்கேற்புடன் விழா சிறப்பாக நடந்தது.
சிறப்பு அழைப்பினராக திரு ஜெயராம் கண்டியர் கிருபாகரன், கணேசத்தேவர், மணிமொழியன் விஸ்வராயர், சந்திரமோகன் விஞ்சிராயர், சக்திவேல் சுரக்குடையர், பழனியப்பன் சோழகர், பாலச்சந்திரன் கருப்பூண்டார் மற்றும் கோபு வல்லுண்டார் முதலாணோர் கலந்துகொண்டனர்.

















விழாவில் பங்கேற்ற திரு. மா. வை. கணேசத் தேவர், ஜெயராம் ராசகண்டியன் கிருபாகரன், பழனியப்பன் சோழகர், மணிமொழியன் விஸ்வராயர், சந்திரமோகன் விஞ்சிராயர், சக்திவேல் சுரக்குடையார், பழனிராஜன் தென்கொண்டர், கோபு வல்லுண்டார்.


















பரிசுகளும் நோட்டுப் புத்தகங்களும் வாங்க காத்திருக்கும் மாணவ மாணவியர்.


















சிறப்புரையாற்றும் திரு ஜெயராம் ராசகண்டியன் கிருபாகரன்




சிறப்புரையாற்றும் சந்திரமோகன் விஞ்சிராயர்

















சிறப்புரையாற்றும் திரு பழனியப்பன் சோழகர்
















சிறப்புரையாற்றும் திரு மா. வை. கணேசத் தேவர்

















ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரனுடன் திரு கணேசத்தேவர், திரு கிள்ளிவளவன் தென்கொண்டார், திரு பழனியப்பசோழகர்
















ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரனுடன் திரு கணேசத்தேவர், திரு கிள்ளிவளவன் தென்கொண்டார், திரு பழனியப்பசோழகர் மற்றும் திரு சந்திரமோகன் விஞ்சிராயர்.
















வரவேற்புரையாற்றும் திரு. கிள்ளிவளவன் தென்கொண்டர்


















நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திரு மா. வை. கணேசத் தேவர்


















நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திரு ஜெயராம் ராசகண்டியன் கிருபாகரன்



















நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திரு ஜெயராம் ராசகண்டியன் கிருபாகரன்



















நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திரு பழனியப்பன் சோழகர்




















நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திரு பழனிராஜன் தென்கொண்டர்





நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திரு சந்திரமோகன் விஞ்சிராயர்


















பரிசுகளும் நோட்டுப் புத்தகங்களும் வாங்க காத்திருக்கும் மாணவ மாணவியர்.