தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Friday, September 24, 2010










வணக்கம் சொந்தங்களே
வரலாறு நெடியது. முடிவில்லாதது. வாழ்க்கையைப் போலவே தன்னை மறந்தவர்களையும், மறைத்தவர்களையும் கடந்து அது நீளப்பயணம் செய்து கொண்டுதான் இருக்கும். இத் தளத்தில் தரப்பெற்றுள்ள தகவல்கள் முற்று முடிந்த முடிபுகள் அல்ல. என்றும் ஆராய இடம் கொடுப்பன. காலப்போக்கில் இதில் சொல்லப் பெற்ற யூகங்கள், செய்திகள் பொய்யாகும்படியான உண்மைகளை ஆய்வாளர்கள் கண்டு சொல்லக்கூடும், சொல்லவும் வேண்டும். வரலாறு முடிந்து விடுவதில்லை, தொடரும் ஒரு தொடரே.

ஆலயங்கள் ஆண்டவனின் இருப்பிடம் மட்டுமல்ல, மானுட ஆன்மாவை மேன்மைபடுத்தும் பயிற்சிக்களங்கள். ஆலயங்கள் வழிபாட்டு மையங்கள் மட்டுமல்ல, வரலாற்று நிலையங்களும்கூட. எமது திருக்கோயில்களில் கண்டு படிக்கப்பட்ட, படிக்கப்படாத கல்வெட்டுகளில் தான் எம் குல வரலாறு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை நம் இனத்திற்கு தெரியவில்லை, புரியவில்லை.

வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக நடக்கமுயன்றுள்ளேன். நான் நடந்த வழித்தடத்தில் என்னால் முடிந்தளவு தேடியுள்ளேன், தேடிக்கொண்டிருக்கிறேன், தேடிக்கொண்டே இருப்பேன். சில பதிவுகள் தப்பாகவும் ஆதாரமற்றவையாகவும் சிலருக்கு தெரியலாம். திருத்திக்கொள்ள ஆதாரங்களுடன் உதவுங்கள். சொந்தங்களே கள்ளர் வரலாறு பற்றிய ஆர்வம் உங்களுக்கும் இருக்குமானால் களத்துக்கு வாருங்கள். உங்கள் கண்களால் தேடப்படும் வரலாறும், கைகளால் எழுதப்படும் வரலாறும் தான் தலைமுறைகளை அடையாலப்படுத்தும். தங்கள் தேடல்களின் முடிவுகளையும் தாங்கள் அறிந்தவை, கேட்டவை, தெரிந்தவைகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கள்ளர் குல வரலாற்று வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவிடும்.
பாசமுடன்
ஜெயராம் இராசகண்டியர்.

பிரகதீஸ்வரம் - அதுவேவிஸ்வரூபம். பெரியகோவில் 1000 ஆண்டுகள்
இலக்கிய படைப்பாளி பாலகுமாரன்

கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. 

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். 

இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.
வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.  உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. 

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. 

"நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். 
இக் கட்டுரையின் படைப்பாளி திரு பாலகுமாரன் அவர்கள்

நன்றி: தினமலர் (சர்வதேச பதிப்பு)

 இக் கட்டுரையின் படைப்பாளி திரு இளங்கோவன் அவர்கள்
கங்கைகொண்டசோழபுரம் கோயில்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்டினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு நிற்கின்றது.அக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் பல வரலாற்றுத் தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன.முறையே தொகுத்துப் பாதுகாத்தால் வரும் தலைமுறைக்கு வரலாற்றைப் பாதுகாத்துத் தந்தோம் என்ற பெருமை நமக்குக் கிடைக்கும்.

முதலில் தஞ்சாவூர் சோழர்களுக்குத் தலைநகராக இருந்தது.சோழநாட்டின் எல்லை இராசராசசோழன் காலத்தில் விரிவடைந்த காரணத்தால் படைக்குத் தலைமை ஏற்றுப் பல போர்களைச் செய்த இராசேந்திரசோழன் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு (கி.பி.1012-1044) கொள்ளிடக்கரையின் வடக்கே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பைச் சீர்செய்து கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கினான்.கங்கைப் படையெடுப்பில் வெற்றி பெற்றதன் அறிகுறியாக இந்த நகர் உருவானதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.

தலைநகரில் கங்கைகொண்டசோழீச்சுரம் கோயிலும்,கோயிலின் மேற்கே மாளிகையும் அதன் மேற்கே சோழகங்கம் என்ற பொன்னேரியும் உருவாக்கினான். கங்கைகொண்டசோழபுரம் சார்ந்த பல ஊர்களுக்குத் தன் வெற்றியின் அறிகுறியாகத் தம் வெற்றிப்பெயர் விளங்கும்படி ஊர்களை உருவாக்கியுள்ளான்.

இன்றைய மலேசியாவில் உள்ள "கெடா" என்ற ஊர் முன்பு கடாரம் என அழைக்கப்பட்டது. இந்தக் கெடா வெற்றியை நினைவூட்டும் வகையில் கடாரம் கொண்டான் என்ற ஊர் உருவாக்கினான்.இன்றும் கங்கைகொண்டசோழபுரத்திற்கு தென்மேற்கே 5 கல் தொலைவில் இந்த ஊர் இன்றும் உள்ளது. சோழப்படைகளுக்கு வேண்டிய ஆயுதங்கள் உருவான இடம் ஆயுதக்களம் என்று அழைக்கப்பட்டது.இன்றும் இந்தப்பெயர் ஊருக்கு வழங்கப்படுகிறது. கட்டடங்கள்,மாளிகைகள் கட்ட சுண்ணாம்பு உருவாக்கிய இடம் சுண்ணாம்புக்குழி என்று அழைக்கப்படுகிறது.

கோட்டை இருந்த இடம் உள்கோட்டை எனப்படுகிறது.யுத்தப்பள்ளம் என்ற ஊர் சண்டை நடைபெற்றதை நினைவூட்டி இன்றும் வழங்கப்படுகிறது.இதன் அருகே திறந்தவாயில் இருந்துள்ளது(தொறந்தவாசல் என மக்கள் இன்று அழைப்பர்).வானதிரையன் குப்பம் என்ற ஊரும் அதனை ஒட்டி வீரசோழபுரம் என்ற ஊரும் சோழர்களின் வரலாற்றைச் சொல்லிக்கொண்டுள்ளன. வானவன்நல்லூர், சோழன்மாதேவி, தென்கச்சிப் பெருமாள்நத்தம்(தென்கச்சி சுவாமிநாதன் பிறந்த ஊர்),வாணதிரையன்பட்டினம்,நாயகனைப்பிரியாள், செயங்கொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு வரலாறு சொல்வன.

சோழபுரம், சோழதரம், வானவன்மாதேவி, கங்கவடங்கன்நல்லூர்,படைநிலை, உள்ளிட்ட ஊர்களும் வரலாற்று முதன்மை உடையன.உலகளந்த சோழன்வெளி என்ற ஊர் ஒன்றும் கோயிலுக்கு அருகில் உள்ளது.உலந்தவெளி எனப் பேச்சுவழக்கில் உள்ளது.

மெய்க்காவல்புத்தூர் ஊரும் குறிப்பிடத்தக்க ஊராகும்.குருகாவலப்பர்கோயிலில் புகழ்பெற்ற வீரநாராயணப் பெருமாள்கோயில் உள்ளது.அரிய சிலைகள்,சிற்பங்கள் உள்ள ஊர். கணக்கவிநாயகர்கோயில் விநாயகர்சிலை உலகப் புகழ்பெற்றது.

சலுப்பை,சத்திரம்,செங்கல்மேடு,பாப்பாக்குடி,மீன்சுருட்டி உள்ளிட்ட ஊர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடங்களாகும். கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து வடநாட்டுக்குச் செல்ல இருந்த பெருவழியில் சத்திரம் அமைத்துப் பலரும் தங்கிச் செல்ல வசதிகள் இருந்துள்ளன. பாண்டிய படையெடுப்புக்குப் பிறகு இந்தப் பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாப் பகுதியாகி விட்டது. நாயாக்கர்,சமீன்தார்கள் ஆட்சியில் இந்தப் பகுதியில் மக்கள் குடியேறி காடுவெட்டி,மண்திருத்தி நிலபுலங்களை வளப்படுத்தியுள்ளனர்.வராலற்று வீரம் செறிந்த மண் இன்றும் வீரம் செறிந்த பகுதியாக விளங்குகிறது.

விக்கிரமசோழன்மங்கலம் என்ற ஊர் அடையாளம் இழந்து விக்கிரமங்கலம் எனப்படுகிறது. இங்குச் சமண,பௌத்த கோயில்கள் இருந்துள்ளன.இதன் அடையாளமாக இந்த ஊரில் கோயில் சிலைகள் உள்ளன. சிலைகளைப் பற்றிய வரலாற்று உணர்வு இல்லாத மக்கள் இச்சிலைகளில் காதுப் பகுதியில் உள்ள துளைகளில் ஆடுமாடுகளைக் கட்டி வைத்திருந்ததை யான் கண்டுள்ளேன்.இப்பொழுது பாதுகாக்கப்படுகிறது.

கங்கைகொண்டசோழபுரத்தின் நான்கு புறத்திலும் நான்கு காளிக்கோயில்கள் இருந்துள்ளன. இவற்றை எல்லைக் காளிகளாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.அவ்வகையில் செங்கல்மேடு(கிழக்கு),இடைக்கட்டு(மேற்கு),வீராரெட்டித்தெரு(தெற்கு),அழகர் கோயில் (வடக்கு) பகுதியில் உள்ள காளியின் சிலைகள் சிறப்புடையன.கலிங்கநாட்டுச்சிற்பங்கள் என்று ஆய்வாளர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.பல ஆண்டுகள் வரை சரியாகப் பராமரிக்கப் படாமல் இச்சிலைகள் வயல்வெளிகளில் மழையிலும், வெயிலிலும் நின்றன. வெளிநாட்டுக் காரர்களுக்குப் பல சிலைகளை முன்னோர்கள் குறைந்த விலைக்கு விற்றதாகவும் மக்கள் வாய்மொழியாகச் சொல்கின்றனர்.

பல வயல்களில் அழகிய கலைவடிவப் பிள்ளையார் சிலைகள் இன்றும் உள்ளன. ஏரி, குளங்களில் துணி துவைக்கப் பயன்படும் கல்களில் அரிய கல்வெட்டுகள் இருப்பதும் உண்டு.மாளிகைமேட்டுப் பகுதிகளில் உள்ள நிலங்களில் களைவெட்டும் பெண்கள் பொற்காசுகள் கிடைகும் என்பதற்காக இந்தப்பகுதிக்குக் களை வெட்ட வருவது உண்டு.முன்பு செங்கல் வீடு கட்டுபவர்கள் மாளிகைமேட்டு அருகே கிணறு தோண்டுவார்கள்.கிணறும் கிடைத்துவிடும்.வீடு கட்டுவதற்கு உரிய கல்லும் கிடைத்துவிடும்.

கங்கைகொண்ட சோழபுரத்து மதில் சுவர்கள் இடிபாடுகள்தான் இன்றைய அணைக்கரையில் உள்ள அணைகட்ட உதவிய கற்களாகும்.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள கிள்ளை,பிச்சாவரம் பகுதிகள் சோழர்காலத்தில் துறைமுக நகராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனச் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.ஒரிசா வரை தமிழர்கள் கடல்வழியாகப் பரவிப்போர் செய்துள்ளமைக்குப் பல சான்றுகள் உள்ளன என்கிறார்.கிழக்குக் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ் அடையாளங்களுடன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்கின்றார்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் வராலற்றுச் சிறப்பு உணர்ந்த முன்னாள் முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் இராசேந்திரச்சோழனுக்கு அவன் பிறந்த மார்கழி மாதம் திருவாதிரை விண்மீனில் விழா எடுத்தும் அகழாய்வுப்பணிகளை விரைவுப்படுத்தியும் வெளியுலகிற்கு இந்த அரிய இடத்தை வெளிப்படுத்தினார். அவர்காலத்தில் ஊக்கம் பெற்ற அகழாய்வுப் பணிகள் இன்று பராமரிப்பின்றி எருமை மாடுகள் வெயில் நேரத்திற்கு விழுந்து புரளும் நீர்க்குழிகளாக உள்ளன.

சிலைகள் சரியாகப் பராமரிக்காமல் மழை,வெயிலில் நனைந்து நிற்கின்றன.பிற்காலத்தில் உருவான அழகர்கோயில் பகுதியில் உள்ள யானைச்சிற்பம் கண்கவர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.பழங்காலச் சிற்பம் என்பதால் இப்பொழுது இடிபாடுகளுடன் சிதைந்து காணப்படுகிறது.பழைமை மாறாமல் அதனைப் பாதுகாப்பது அரசுக்கும் மக்களுக்கும் உரிய கடமையாகும்.


நன்றி
முனைவர் மு.இளங்கோவன்
உதவிப் பேராசிரியர்
தமிழ் பீடம்
பாரதிதாசன் பெண்கள் அரசுக்கல்லூரி
புதுச்சேரி


No comments:

Post a Comment